தமிழ்நாடு
நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து ரோல்ஸ்ராய்ஸ் கார் ஒன்றை வாங்கினார். இறக்குமதி செய்த அந்த காருக்கு நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என்று விஜய் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த சில ஆண்டுகளாக நடந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில் நடிகர் விஜய் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அது மட்டுமின்றி அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும் தீர்ப்பளிக்கப்பட்டது.
மேலும், ‘நடிகர்கள் சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் ஹீரோக்களாக இருக்க வேண்டும் என்றும், சமூக நீதிக்காக பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்யக்கூடாது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
மேலும் நன்கொடை கொடுப்பது போன்று வரி செலுத்துவதை எண்ணக்கூடாது என்றும் வரி செலுத்த வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கட்டாய பங்களிப்பு என்றும் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. பிரபல நடிகர் விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் சென்னை ஐகோர்ட் அபராதம் விதித்து தீர்ப்பளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.