தமிழ்நாடு
கொடுத்தது கொடுத்ததுதான், திரும்ப பெற முடியாது.. பெற்றோர் கொடுத்த சொத்து குறித்து ஐகோர்ட் தீர்ப்பு!
வாரிசுகளுக்கு பெற்றோர் கொடுத்த சொத்து கொடுத்தது தான் என்றும் அதை திரும்பப் பெற முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெற்றோர்கள் தங்கள் வாரிசுகளுக்கு சொத்து கொடுக்கும்போது வாரிசுகள் தங்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை இல்லை என்றால் அந்த சொத்தை பெற்றோர் திரும்ப பெற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை அம்பத்தூரை சேர்ந்த ஒருவர் தனது மகனுக்கு தன்னுடைய சொத்து வழங்கப்பட்டுவிட்டதாகவும், ஆனால் தனக்கு ஜீவனாம்சம் மகனிடம் இருந்து கிடைக்கவில்லை என்பதால் தனது சொத்தை திருப்பி பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு குறித்து சென்னை ஐகோர்ட் நீதிபதி சுப்பிரமணியம் கூறியபோது, ‘பிரிவு 23 படி சொத்து பரிமாற்றம் செல்லாது என அறிவிக்க இரண்டு நிபந்தனைகள் உள்ளதாகவும் முதல் நிபந்தனை சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு பரிமாற்ற ஆவணம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் இரண்டாவதாக இடமாற்றம் செய்பவர் வகிக்க வேண்டிய பொறுப்பு சரி செய்யப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த நிபந்தனைகளில் ஒன்று பூர்த்தி செய்யாவிட்டால் கூட ஆவணங்கள் செல்லாது என்று கூறி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும் பெற்றோர் தன்னுடைய வாரிசுக்கு சொத்தை மாற்றும்போது வாரிசுதாரர் தன்னை கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை இல்லை என்றால், சொத்தை திரும்பப் பெற முடியாது எனவும், வாரிசுதாரருக்கு சொத்து கொடுத்தது கொடுத்தது தான் என்றும் தீர்ப்பளித்தார்.
ஆனால் அதே நேரத்தில் மனுதாரர் சிவில் நீதிமன்றம் சென்று சொத்து பரிமாற்ற ஆவணத்தை ரத்து செய்ய மனு அளிக்கலாம் என்றும் அந்த மனுவும் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலச் சட்டத்தின் கீழ் அவர்களை பராமரிக்கத் தவறிய குற்றச்சாட்டு இருந்து அந்த குற்றச்சாட்டில் தீர்ப்பாயம் திருப்தி அடைந்தால் மட்டுமே அத்தகைய சொத்து பரிமாற்றத்தில் மோசடி செய்யப்பட்டதாகக் கருதப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.