தமிழ்நாடு
ஓய்வு பெறும் வயது 60: தமிழக அரசின் உத்தரவு குறித்து ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு சமீபத்தில் பிறப்பித்த ஆணை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59இல் இருந்து 60 ஆக உயர்த்தி தமிழக முதல்வர் சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்/ இந்த உத்தரவுப்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்டரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்கள் அனைவருக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.
அதேபோல் இந்த உத்தரவு ஆசிரியர் ஆசிரியர் பணியில் இல்லாத ஊழியர்கள், அரசு கல்வி நிறுவனங்கள், அரசு உதவிப்பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், அரசியலமைப்பு மற்றும் சட்டரீதியான துறைகள், பொதுத்துறையின் கீழ் வரும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சிகள், சொசைட்டிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும் இந்த உத்தரவு கடந்த மே மாதம் முதல் அமலுக்கு வருகிறது என்றும் அரசாணை வெளியானது.
இந்த நிலையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் அரசாணையை எதிர்த்து மனுதாரருக்கு பத்தாயிரம் ரூபாயை அபராதம் விதித்ததுடன் இரண்டு ஆண்டுகளுக்கு பொதுநல வழக்கு தொடரவும் தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.