தமிழ்நாடு
ரெளடிகளை ஒழிக்க புதிய சட்டம்: நீதிமன்றம் பாராட்டு!
ரெளடிகளை ஒழிக்க புதிய சட்டம் கொண்டு வரப்பட்டு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தமிழ்நாடு அரசின் முடிவுக்கு சென்னை உயர்நீதி மன்றம் பாராட்டு தெரிவித்து இருக்கிறது.
வேலூரில் உள்ள சிறைக்கைதிகளின் ஆட்கொணர்வு வழக்கு நீதிபதி கிருபாகரன், வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உட்பட தமிழ்நாட்டில் எத்தனை ரெளடிகள் உள்ளனர், அவர்கள் மீது எவ்வளவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் ரவுடிகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மகாராஷ்டிரா கர்நாடகா மாநிலங்களை போல் ரெளடிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது? என்றும் நீதிபதிகள் வினவினர்.
இதனை அடுத்து இந்த வழக்கு மீண்டும் இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தமிழ்நாட்டில் ரெளடிகளை ஒழிக்க புதிய சட்ட வரைவு மசோதா குழுவின் மூலம் தயாரிக்கப்பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அடுத்த சட்டமன்ற கூட்டத் தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார். நீதிபதிகள் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தனர். ரெளடிகளை ஒழிக்க சட்டம் கொண்டு வரப்பட்டால் ரெளடிகளை காவல்துறையால் தீவிரமாக ஒடுக்க முடியும் என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஏற்கனவே கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ரெளடிகள் கைது செய்யப்பட்டார்கள் என்பதும் அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், அரிவாள்கள் உள்பட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.