தமிழ்நாடு
போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிக்க புதிய கட்டுப்பாடு!
![Tyre - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/Tyre.jpg)
போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிக்க புதிய கட்டுப்பாடுகளைச் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஜனவரி 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதில் போகி பண்டிகை ஜனவரி 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
போகி பண்டிகையின் போது பழையன கழிதல், புதியன புகுதல் என்பதற்கு ஏற்றவாறு, வீட்டில் உள்ள பழைய பொருட்கள் அனைத்தையும் எரித்து புதிய பொருட்களை வாங்கி பயன்படுத்தவதை தமிழர்கள் பின்பற்றி வருகிறார்கள்.
ஆனால் மக்கள் பழைய டையர், டியூப், பிளாஸ்டிக் போன்றவற்றையும் போகிப் பண்டிகையின் போது எரிப்பது வாடிக்கையாக உள்ளது. இதனால் ஏற்படும் காற்று மாசை குறைக்கும் விதமாகச் சென்னை கார்ப்ரேஷன் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதன்படி சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் தேவையில்லாத பொருட்களை மக்கள் தூய்மை பணியாளர்களிடம் ஜனவரி 8-ம் தேதி முதல் வழங்கலாம். அதனை அவர்கள் முறையாக அகற்றுவார்கள். இதனைச் சென்னையில் உள்ள 15 மண்டல அதிகாரிகளும் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு அறிவிக்க வெண்டும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் இந்த அறிவிப்பின் மூலம் சென்னையில் போகி பண்டிகையின் போது தேவையில்லா பொருட்களை எரிப்பது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.