தமிழ்நாடு
சென்னை மெரீனா கடற்கரை மீண்டும் மூடப்படும்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!
சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அளவுக்கு மீறி கூடினால் மீண்டும் மெரினா கடற்கரையை மூட வேண்டிய நிலை ஏற்படும் என சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் எச்சரிக்கை விடுத்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தினமும் 200க்கும் குறைவாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து சென்னை மாநகராட்சி பல்வேறு தளர்வுகளை அறிவித்தது என்பதும் கிட்டத்தட்ட அனைத்து கடைகள், மால், திரையரங்குகள் உள்பட அனைத்தையும் திறக்க அனுமதித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பல மாதங்களுக்குப் பின்னர் சென்னை மெரினா திறக்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் அங்கு குவிந்து வருகின்றனர். அதேபோல் சுற்றுலா பயணிகளும் அதிகம் சென்னை மெரீனாவுக்கு வருகை தந்து கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் அளவுக்கு மீறி பொதுமக்கள் கூடினால் மீண்டும் மெரினா கடற்கரையை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்று சென்னை மாநகராட்சி துணை ஆணையர் எச்சரித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.