தமிழ்நாடு
கடற்கரை-வேளச்சேரி இடையே கூடுதல் மின்சார ரெயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
கடற்கரை – வேளச்சேரி அருகே இடையே கூடுதல் ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே சற்றுமுன் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக மின்சார ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மீண்டும் மின்சார ரயில் சேவை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது மின்சார ரயில்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் சமூக இடைவெளி இன்றி பயணிகள் பயணம் செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து கூடுதல் மின்சார ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதன்படி சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே வார நாட்களில் 114 மின்சார ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வரும் நிலையில் இனி 140 மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மின்சார ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் ஏதுவாக இருக்கும் என்று அறிவித்துள்ளது.
மேலும் கடற்கரை – வேளச்சேரி இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் 76 மின்சார ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது 96 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.