தமிழ்நாடு
423 விபத்துக்கள்.. கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை.. பரிதாபமாக உயிரிழந்த ஜோஹோ பெண் ஊழியர்!
தாம்பரம் – மதுரவாயில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்கனவே 423 விபத்துக்கள் நடந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு இளம்பெண் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று 22 வயது இளம் பெண் ஒருவர் தனது சகோதரரை நீட் பயிற்சி வகுப்பிற்காக அழைத்துச் செல்ல தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென சாலையில் இருந்த ஒரு பள்ளம் காரணமாக அவர் பேலன்ஸ் தவறி கீழே விழுந்தார். இதனையடுத்து பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறியதால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த இளம்பெண் ஜோஹோ நிறுவனத்தின் ஊழியர் என்பதால் அந்நிறுவனத்தின் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வருத்தத்தை தெரிவித்துள்ளார். ஒரு மோசமான ரோடு காரணமாக ஒரு குடும்பம் தனது அன்பான மகளை இழந்து விட்டது என்றும் எங்கள் நிறுவனம் ஒரு நல்ல ஊழியரை இழந்து விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
One of our engineers, Ms. Shobana died tragically when her scooter skidded in the heavily potholed roads near Maduravoyal in Chennai. She was taking her younger brother to school.
Our bad roads have caused a
tragic loss to her family and Zoho. https://t.co/8XAycPhIsk pic.twitter.com/JlX5roD6DS— Sridhar Vembu (@svembu) January 3, 2023
இந்த சாலையில் வடிகால் 32 கிலோ மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டாலும், 11 கிலோமீட்டர் நீளத்திற்கு மட்டுமே மூடப்பட்டுள்ளதாகவும் மீதி உள்ள தூரத்தை மூடுவதற்காக மேல் அதிகாரிகளின் உத்தரவுக்கு காத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த சாலையில் 423 சாலை விபத்துக்கள் நடந்துள்ள நிலையில் தற்போது தான் இளம்பெண்ணின் மறைவிற்குப் பின்னர் சாலையில் உள்ள பள்ளங்களை சரி செய்யும் பணி நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
சென்னையில் சாலையில் பள்ளங்கள் சிக்கி மரணம் நிகழ்வது தொடர்கதையாக இருந்து வரும் நிலையில் இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் சென்னை சாலைகளில் உள்ள பள்ளங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது. சென்னை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் ஒருசாலை விபத்து கூட நடைபெறவில்லை என கடந்த 2021ஆம் ஆண்டு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது. ஆனால் மதுரையில் மட்டும் நடந்த சாலை விபத்தில் 4 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாக உள்ளது.
இதுபோன்ற விபத்துகள் நடக்கும் போது அந்த சாலை யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பதை ஒரு சில துறைகள் மாற்றி மாற்றி கூறி வருவதால் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது யார் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுகிறது. நேற்று விபத்து நடந்த இந்த சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில் இந்த சாலை மாநில நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் வரும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆனால் மாநில நெடுஞ்சாலை துறையோ, இந்த சாலை தேசிய நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் வருவதாக கூறி மாறிமாறி கை காட்டி வருகிறது.
மொத்தத்தில் சாலையின் தரத்தை அதிகரித்தால் மட்டுமே விபத்துகள் நடக்காமல் இருக்கும் என்றும் சாலைகளின் தரத்தை பராமரிக்க வேண்டியது மாநகராட்சி, மாநில நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றின் கடமை என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.