இந்தியா
கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு: ரத்தான சந்திரயான் 2!
![Chandrayan 2 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/07/Chandrayan-2.jpg)
சந்திரயான் 2 விண்கலம் இன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தொழிநுட்பக் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டதால் சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
நிலவின் தென்துருவ மண்டலத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 ஏவப்பட இருந்தது. இதுவரையில் நிலவின் தென்துருவ மண்டலத்தில் எந்த நாடுமே தடம் பதிக்கவில்லை. இதனால் இதில் இந்தியா உலகிற்கே முன்னோடியாக இருக்கும். எனவே இதுவரையில் இஸ்ரோ எடுத்துக்கொண்ட பணிகளிலேயே சந்திரயான் 2 தான் மிகக் கடினமானது என்று கூறப்பட்டது.
இதனையடுத்து அனைத்து பணிகளும் நிறைவடைந்து இன்று அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயான் 2-வை விண்ணில் ஏவ அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் சுமார் 2 மணியளவில் இஸ்ரோ ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், விண்கலனை ஏவுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் சில தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சந்திரயான் 2 விண்கலனை ஏவுதல் இன்று கைவிடப்படுகிறது. எப்போது விண்கலன் ஏவப்படும் என்ற தகவல் பின்னர் அறிவிக்கப்படும் என கூறியுள்ளது.
விண்கலத்துக்கு எரிபொருளை நிரப்பியபோது தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே முதலில் ராக்கெட்டிலிருந்து எரிபொருள் அனைத்தையும் வெளியேற்றி பின்னர் ராக்கெட் முழுமையாக ஆய்வு செய்யப்படும் என கூறப்படுகிறது.