இந்தியா
சந்திரபாபு நாயுடுவை மனநோயாளி என விமர்சித்த சந்திரசேகர் ராவ்!
119 உறுப்பினர்களை கொண்ட தெலுங்கானா சட்டசபை தேர்தல் வரும் டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சதிரசேகர் ராவ் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை மனநிலை பாதிக்கப்பட்டவர் என விமர்சித்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விகாராபாத் மாவட்டத்தின் பார்கி தொகுதியில் பிரச்சாரம் செய்த சந்திரசேகர் ராவ் தனது உரையில், நான் சந்திரபாபு நாயுடுவை மனநோயாளி என்கிறேன். ஏனென்றால்? ஒருமுறை அவர் காடுகளை பாதுகாப்பதற்காக ஆடுகளுக்கு தடைவிதிக்கிறேன் என உத்தரவிட்டார். ஆடு இனம் எப்போது தோன்றியது? அவர் எப்போது பிறந்தார் என்பது தெரியுமா? இயற்கை படைப்பான ஆடுகளை தடை செய்ய இவர் யார்? என சந்திரசேகர் ராவ் கேட்டார்.
மேலும் ஐதராபாத்தை உலக வரைபடத்தில் சேர்ப்பதற்கு தான் ஒரு கருவியாக இருப்பதாக அவர் கூறுகிறார். இந்த மனிதரை நாம் என்ன செய்யலாம்? அவர் ஒரு மோசடிக்காரர் பிறகு ஏன் அமராவதியை கட்டமைப்பதில் தோல்வியுற்றார். அங்கு வெறும் கிராஃபிக்ஸ் மாதிரி கட்டிடங்கள்தான் உள்ளது. உண்மையான கட்டிடங்கள் எதுவும் அமராவதியில் அமைக்கப்படவில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி 103 முதல் 106 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்புகளை கூறுகின்றன என்றார். வரும் டிசம்பர் 7-ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு டிசம்பர் 11-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.