இந்தியா
கொரோனா வைரஸ்: தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
![coronavirus3456 - Bhoomitoday Us corona death toll overtakes world war 2](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/coronavirus3456.jpg)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தான் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. இதனை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட்டு தற்போது பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் வேகமாக பரவி வருவதாக கூறப்பட்டது. இதனையடுத்து தற்போது கொரோனா வைரஸ் மீண்டும் தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் மிக வேகமாக பரவி வருவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப் மற்றும் கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களில் தான் இந்தியாவில் உள்ள மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு உடையவர்களில் 82% பேர் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் இந்த ஐந்து மாநிலங்களில் 82% இருப்பதால் கொரோனா பரவலை தடுக்க இந்த ஐந்து மாநில அரசுகளும் சிறப்பு கவனம் செலுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஏற்கனவே கடந்த சில நாட்களாக 500க்கும் குறைவான கொரோனா பாதிப்பில் இருந்த தமிழகம் நேற்று 500 தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.