இந்தியா
9 மாத குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு!
9மாத குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து இருப்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என ஏற்கனவே மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வாகனங்களில் செல்லும் குழந்தைகளும் விபத்தின் போது உயிர் இழப்பு ஏற்படுவதால் குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்ற விதியைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி 9 மாத குழந்தையிலிருந்து நான்கு வயதில் குழந்தைகள் வரை இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கண்டிப்பாக ஹெல்மெட் போட வேண்டும் என்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்போது பெல்ட் அணிய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குழந்தைகளுக்கான பெல்ட் எடை குறைவாகவும் நீளத்தை கூட்டிகுறைக்க கூடிய அளவில் பெல்ட்இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குழந்தைகளுக்கான ஹெல்மெட் பிரத்தியேகமாக ஐஎஸ்ஐ தரத்துடன் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லும் போது 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது என்றும் விதிகள் அமல்படுத்தபடுவதாகவும் இந்த விதிகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 9 மாத குழந்தைகள் முதல் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டுமென்ற விதி அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.