இந்தியா
டுவிட்டர், பேஸ்புக் நிறுவனங்களுக்கு 36 மணி நேரம் கெடு கொடுத்த மத்திய அரசு!
மத்திய மாநில அரசுக்கு எதிராகவும் மாநில முதல்வர் மற்றும் பிரதமர் உள்பட உயர் பதவியில் உள்ளவர்களுக்கு எதிராகவும் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
புரட்சி, பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் நாட்டை பிளவுபடுத்தும் வகையில் பல கருத்துக்களை பகிரப்பட்டு வருவதாகவும் இது போன்ற கணக்குகளை முடக்க வேண்டும் என்றும் மத்திய அரசு சமூக வலைதளங்களுக்கு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்து வந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்தவர்களின் கணக்குகளை முடக்க வேண்டும் என மத்திய அரசு கூறியதை அடுத்து மத்திய அரசுக்கும் டுவிட்டர் நிர்வாகத்திற்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ’கூ’ என்ற சமூக வலைதளத்தை மத்திய அரசு பரிந்துரை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் அந்நிய சக்திகளின் ஊடுருவல் காரணமாக பதிவு செய்யப்படும் தேசவிரோத பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் மத்திய அரசு இவ்வாறு நீக்குவதற்கு பரிந்துரை செய்த 36 மணி நேரங்களுக்குள் அந்த பதிவுகள் நீக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல் அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் முதல்வர், பிரதமர் போன்றவர்களுக்கு எதிரான கருத்துக்களை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டால் அவை 36 மணி நேரத்திற்குள் நீக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளர்கள் உள்ள நிறுவனங்கள் இந்தியாவில் அலுவலகம் அமைக்க வேண்டும் என்ற சட்டத்திருத்தம் கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.