இந்தியா
7-11 வயதினர்களுக்கு தடுப்பூசி: சீரம் நிறுவனத்திற்கு அனுமதி!
இந்தியாவில் 7 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ள சீரம் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் கடந்த பல மாதங்களாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழகத்தை பொருத்தவரை ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு லட்சக்கணக்கானவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி தினந்தோறும் அரசு மருத்துவமனைகளிலும் ஒரு சில சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டும் அதில் பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. உதயநிதி ஸ்டாலினின் தொகுதியான சேப்பாக்கம் தொகுதியில் வீடு வீடாக சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் பெரியவர்களுக்கு கிட்டத்தட்ட 50 சதவீத மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட நிலையில் சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான பரிசோதனைகளும் நடைபெற்று வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் 7 முதல் 11 வயதினருக்கான சிறுவர்களுக்கு தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ள இந்தியாவின் சீரம் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து அந்த நிறுவனம் 11 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசியை மருத்துவ ரீதியில் பரிசோதனை செய்து வருகிறது. இந்த தடுப்பூசி இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது என்பதும் இந்த பரிசோதனையின் முதல் கட்டமாக 100 பங்கேற்பாளர்களுக்கு பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தால் விரைவில் 7 முதல் 11 வயதான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடங்கும் என்றும் 12 வயது மேற்பட்டவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் அந்த தடுப்பூசி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.