இந்தியா
ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகம்: விமானப்படை உதவியை நாடியது மத்திய அரசு!
இந்தியாவில் நாளுக்கு நாள் உருமாறிய கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய மாநில அரசு விதித்துள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இருப்பதாகவும் அதேபோல் தடுப்பூசி தட்டுப்பாடும் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
இந்த நிலையில் தங்குதடையின்றி அனைத்து மருத்துவமனைகளுக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்ய இந்திய விமானப்படையின் உதவியை மத்திய அரசின் நாடியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மும்பை, டெல்லி ஆகிய நகரங்களுக்கு ஆக்சிஜன் தேவை மிக அதிகமாக இருப்பதை அடுத்து அங்கு உள்ள மருத்துவமனைகளுக்கு விரைவாக ஆக்சிஜன் சிலிண்டர் வினியோகம் செய்ய இந்திய விமானப்படை பயன்படுத்தப்பட உள்ளது.
அதேபோல் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு நிலைமையை சரிசெய்ய சிறப்பு ரயில்களையும் பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நேற்று லக்னோவில் இருந்து காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை நிரப்ப சிறப்பு ரயில்களில் அனுப்பி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் அனைத்து மருத்துவமனைகளிலும் சிலிண்டர் தட்டுப்பாடு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.