தமிழ்நாடு
தேசிய நெடுஞ்சாலைகளில் 100 கிமீ வேகத்திற்கு மேல் செல்ல முடியாது:சென்னை ஐகோர்ட் உத்தரவு
100 கிலோ மீட்டருக்கு மேல் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லலாம் என மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் 100 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லலாம் என மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
காஞ்சிபுரம் பகுதியில் சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பல் மருத்துவர் ஒருவர் விபத்தில் சிக்கியதை அடுத்து அவர் இதுகுறித்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனத்தின் வேகம் அதிகரித்ததன் காரணமாகவே விபத்துகளும் அதிகரித்து வருவதாகவும் 2018ஆம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது குறித்து நீதிபதிகள் கருத்து தெரிவித்த போது அதிக வேகம் என்பது உயிரை பணயம் வைத்து பயணம் செய்வதற்கு சமம் என்றும் இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினர். மேலும் சாலை மேம்பாட்டு எஞ்சின் செயல்பாட்டை அதிகரிக்க வேகம் அதிகரிக்கபட்டதாக மத்திய அரசு கூறிய விளக்கத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.
மேலும் 60 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தை நிர்ணயம் செய்ய மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த உத்தரவை அடுத்து இனி தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் 100 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. வாகனங்களுக்கு 60 முதல் 100 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தை நிர்ணயம் செய்து புதிய அறிவிப்பை நீதிமன்றத்தின் உத்தரவின்படி மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.