தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமிக்கும் கே.ஆர்.ராமசாமிக்கும் சட்டசபையில் காரசார விவாதம்!
![TN Assembly - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/07/TN-Assembly.jpg)
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர்.ராமசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்று கொண்டு வந்தார். இதில் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை அதிகமாக உள்ளது. ஏரி, குளங்கள், கால்வாய்கள் சரிவர தூர் வாரப்படவில்லை. அரசு இதனை முறையாக செய்யவில்லை, கடல் நீரை குடிநீராக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தண்ணீரை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டும் என குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கர்நாடகத்தில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மேகதாது அணை கட்டப்படும், காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்று கூறியிருந்தார். சித்தராமையா முதல்வராக இருந்தபோது நாம் கோரிக்கை வைத்தும் தண்ணீர் திறந்துவிடவில்லை. நேரில் சந்திக்க வருகிறேன் என்று கூறியதற்கும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.
கர்நாடகாவில் திமுகவின் கூட்டணிக் கட்சியை சேர்ந்த ஆட்சிதான் நடக்கிறது. எனவே தயவு செய்து இங்கு எவ்வளவோ பேசுகிற நீங்கள், தண்ணீரை திறந்துவிட ஏற்பாடு செய்தால், காவிரி தண்ணீர் மேட்டூருக்கு வந்து, அதன் மூலம் வீராணத்துக்கு வந்து சென்னைக்கு தண்ணீர் கிடைக்கும் என்றார். இதற்கு பதில் அளித்த, கே.ஆர். ராமசாமி, காவிரி நீரை கொண்டு வர வேண்டியது ஆளும் கட்சியின் பொறுப்பு. காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சியை குற்றம்சாட்டுவது எப்படி சரியாகும்? என்றார்.