தமிழ்நாடு
தீபாவளி அன்று திரையரங்குகள் மூடப்படுமா? நீதிமன்ற வழக்கால் பரபரப்பு!
வரும் தீபாவளி அன்றும் அதற்கு முந்தைய நாளும் தமிழகத்தில் திரையரங்குகளை மூட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வரும் தீபாவளி அன்று ரஜினியின் ’அண்ணாத்த’ உள்பட ஒரு சில திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தீபாவளி நாளான நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் திரையரங்குகளை மூட உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் தற்போது தொடர்ச்சியாக திருவிழா காலமாக இருப்பதால் நோய் தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் தாங்களாகவே பின்பற்றுவதற்கு வாய்ப்பு குறைவு என்றும் இதனை கருத்தில் கொண்டு நவம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் திரையரங்குகளை மூட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் இதுவரை 50 சதவீத இருக்கைகளுடன் அனுமதிக்கப்பட்ட திரையரங்குகள் சமீபத்தில் 100% இருக்கைகள் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டது என்றும் இதன் காரணமாக வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகும் திரையரங்குகளில் கட்டுக்கடங்காத கூட்டம் கூட வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் நோய் தொற்று அதிகரிக்க காரணமாக அமையும் என்றும் இதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவில் திருவிழாக்கள், குடமுழுக்கு விழாக்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகளில் பொதுமக்கள் ஒன்றுகூட நவம்பர் 15ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் திரையரங்குகளில் மட்டும் 100 சதவீத இருக்கைகளுக்கு சமூக இடையின்றி திறக்கப்பட்டால் கொரோனா அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் இதனை அடுத்து நோய்தடுப்பு விதிகள் மீறப்பட்டதாக கணக்கிடப்படும் என்றும் அந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே திரையரங்குகள், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை இயங்க அனுமதித்து சமீபத்தில் திறக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து, நவம்பர் 3, 4 தேதிகளில் திரையரங்குகளை மூட உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.