தமிழ்நாடு
பாரதமாதா குறித்து சர்ச்சை கருத்து: பாதிரியார் மீது 7 பிரிவுகளில் வழக்கு
![george ponnaiya - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/07/george-ponnaiya.jpg)
பாரதமாதா குறித்தும், பிரதமர் மோடி குறித்தும், திமுக குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாதிரியார் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 18ஆம் தேதி இஸ்லாமிய, கிறிஸ்துவ அமைப்புகள் இணைந்து கூட்டம் ஒன்றை நடத்தினர். இந்த கூட்டத்தில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா என்பவர் பாரதமாதா குறித்தும், இந்தியா குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
அதுமட்டுமின்றி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட முக்கிய தலைவர்களையும் அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதேபோல் திமுக வெற்றி பெற்றது சிறுபான்மையினர் போட்ட பிச்சை என்றும் சிறுபான்மையினர் துணையால் வெற்றி பெற்றுவிட்டு தற்போது அமைச்சர்கள் இன்று கோயிலுக்கு செல்கிறார்கள் என்றும் இந்துக்கள் உங்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
அவருடைய இந்த பேச்சு சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவியதை அடுத்து பாஜக மற்றும் இந்து அமைப்பினர் கன்னியாகுமரி மாவட்ட காவல் நிலையங்களில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக இந்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் காவல்துறை எடுக்காததை அடுத்து பாஜகவினர் இதுகுறித்து போராட்டம் நடத்தவும் அறிவிப்பு செய்தனர்.
இதனையடுத்து தற்போது பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், ஜாதி மற்றும் மதம் இருதரப்பினரிடையே விரோதத்தை உருவாக்குதல், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துதல், மத நம்பிக்கைகளை அவதூறு பரப்புதல் உள்பட 7 பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.