தமிழ்நாடு
விஜயகாந்த் கட்சியினர் மீது வழக்குப்பதிவு: கூட்டணி அவ்வளவுதானா?
நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கட்சி அலுவலகத்துக்கு நீண்ட இடைவெளிக்கு பின்னர் வந்தார் என்பதும் கட்சி கொடியை ஏற்றி தொண்டர்களுக்கு புத்துணர்ச்சியை ஊட்டினார் என்பதும் தெரிந்ததே.
மேலும் அடிக்கடி இனிமேல் கட்சி அலுவலகத்துக்கு வருவேன் என்றும் தேர்தல் பிரச்சாரம் செய்வேன் என்றும் அவர் கூறியது தொண்டர்களுக்கு உற்சாகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று விஜயகாந்துடன் 75 வாகனங்களில் ஊர்வலமாக சென்ற தேமுதிகவினர் மீது திடீரென போலீசார் வழக்கு பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று சென்னை கோயம்பேடு தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு விஜயகாந்த் மற்றும் அவருக்கு பின்னால் சுமார் 75 வாகனங்களில் தேமுதிகவினர் ஊர்வலமாக சென்றனர். அவ்வாறு ஊர்வலமாக சென்ற இருநூறு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொரோனா விதிமுறைகளை மீறி கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவுக்கு கட்டுப்படாதது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வி எழுந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென விஜயகாந்த் கட்சியினர் மீது அதிலும் விஜயகாந்தை வரவேற்க வந்த கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி இல்லை என்பதை உறுதி செய்வதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திமுக தரப்பில் இருந்தும் எந்தவிதமான அழைப்பும் இல்லை என்பதால் தேமுதிக வரும் தேர்தலில் தனித்து விடப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது