தமிழ்நாடு
கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதற்கு எதிரான வழக்கு தள்ளுபடி.. உயர்நீதிமன்றம் அதிரடி!
கோவில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்வதற்கு எதிராகத் தொடங்கப்பட்ட வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிகளில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யும் சட்டத்திற்கு எதிராக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்க ஒன்று தொடுத்து இருந்தார்.
இந்த வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி, நீதிபதி ஆதி கேசவளு இருவரும் விசாரித்தனர். அப்போது 2008-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் எந்த மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது பக்தர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது. தமிழில் அர்ச்சனை செய்ய எந்தத் தடையும் இல்லை என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும் குறித்த மொழியில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் வற்புறுத்த முடியாது எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
அண்மையில் கோவில்களில் தமிழில் ஓதுவார்கள் மற்றும் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.