தமிழ்நாடு
நீட் தேர்வை ஆய்வு செய்யும் ஏகே ராஜன் குழுவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு!
சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்வோம் என திமுக வாக்குறுதி கொடுத்தது. அந்த வாக்குறுதியின் அடிப்படையில் திமுக ஆட்சியை பிடித்ததும் ஏகே ராஜன் என்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது
இந்த குழுவினர் நீட் தேர்வு குறித்து பொதுமக்கள், மாணவர்கள், பெற்றோரிடம் கருத்து கேட்கும் என்றும் நீட்தேர்வு தாக்கத்தால் மாணவர்கள் எந்த அளவு பாதிக்கப்பட்டார்கள் என்பது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த குழு தற்போது இது குறித்த பணிகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நீட்தேர்வு தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே ராஜன் தலைமையிலான குழுவை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்
மருத்துவக் கல்வியை மேம்படுத்த ஆணையத்திடம் மட்டுமே ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்திற்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது என்றும், உச்சநீதிமன்ற உத்தரவு, தேசிய நலன் அடிப்படையில் நீட்தேர்வு கொண்டுவரப்பட்டது என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,.