தமிழ்நாடு

பெட்ரோலுக்கு பதில் டீசல் போட்டதால் தீப்பிடித்த எரிந்த கார்: பெரும் பரபரப்பு

Published

on

பெட்ரோலுக்கு பதில் டீசல் போட்டதால் திடீரென கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடந்த நிலையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை என்ற பகுதியில் லட்சுமி திரையரங்கம் எதிரில் சின்னப்பன் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் நிலையம் ஒன்று உள்ளது. இந்த பெட்ரோல் நிலையத்திற்கு வந்த தேவகோட்டை அருகில் உள்ள கிராமம் ஒன்றை சேர்ந்த பாண்டியன் என்பவர் தனது காரில் பெட்ரோல் நிரப்புவதற்காக வந்தார்.

அவர் ஊழியர்களிடம் ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் போடுங்கள் என்று கூறிய நிலையில் அந்த ஊழியர் அலட்சியமாக பெட்ரோலுக்கு பதிலாக டீசல் நிரப்பி உள்ளதாக தெரிகிறது. இதனால் வண்டி நகரவில்லை. இதனையடுத்து பெட்ரோல் நிலைய ஊழியர்கள் வண்டியை நகர்த்தி ஸ்டார்ட் செய்ய சொன்னார்கள். அப்போது திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது.

இதனை அடுத்து பெட்ரோல் நிலைய ஊழியர்கள் அந்த காரில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. இதனையடுத்து தேவகோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலுமாக எரிந்து நாசமானது.

இதுகுறித்து காரின் சொந்தக்காரர் பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மீது புகார் அளித்துள்ள நிலையில் இந்த புகார் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பெட்ரோலுக்கு பதிலாக டீசல் போட்டதால் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் தேவகோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version