இந்தியா
பட்ஜெட் 2023-24: வருமான வரி விலக்கு ரூ.5 லட்சமாக உயருமா? பரபரப்பு தகவல்
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு தொகை அதிகரிக்கப்படும் என்று மக்கள் ஏக்கத்துடன் பார்த்து வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது 2.5 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தால் வருமான வரி தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற நிலை இருக்கும்போது இது ஐந்து லட்ச ரூபாயாக உயருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி 2023-24 பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில் இந்த பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவோருக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருப்பதாகவும் குறிப்பாக தேர்தல் நெருங்கி வருவதால் மத்திய அரசு வரி செலுத்துவதற்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பல அறிவிப்புகள் இருக்கும் என்றும் சம்பளம் வாங்கும் வர்க்கத்தினர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
இந்த ஆண்டாவது வருமான வரி விலக்கு வரம்பை 2.5 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்ரும், 2.5 லட்ச ரூபாயில் இருந்து 5 லட்சமாக வருமான வரி விலக்கை அதிகரித்தால் பொருளாதார நிலை மேம்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
அதேபோல் 60 வயதுக்கு மேல் 80 வயது வரை உள்ள மூத்த குடிமக்களுக்கு தற்போது மூன்று லட்ச ரூபாய் வரை வருமான வரி விலக்கு கிடைத்து வரும் நிலையில் அது ஆறு லட்ச ரூபாயாக உயர்த்த வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் 2023 -24ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது என்றும் கூறப்பட்டு வருகிறது.
அதேபோல் வருமான வரி செலுத்தும் தொகைக்கு ஆயுள் காப்பீட்டில் அளிக்கப்படும் விலக்கின் அளவும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் வருமான வரி 80 சி கீழ் கிடைக்கும் விலக்குகளில் இருந்து ஆயுள் காப்பீட்டை தனியாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கோரிக்கையும் இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிறைவேற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போதைய அமைப்பில் அனைத்து சேமிப்பு விருப்பங்களும் 80 சி பிரிவில் இருக்கும் நிலையில், அதில் அதிகபட்சம் ஒன்றரை லட்சம் மட்டுமே வரம்பு உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் ஆயுள் காப்பீட்டு திட்டத்தை 80சி-யில் தனியே தனியாக எடுத்தால் அதன் வரம்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வருமான வரி செலுத்தும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பட்ஜெட்டிற்கு முன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட்டிய ஆலோசனை கூட்டத்தில் வருமானவரி அதிகாரிகள் கலந்து கொண்ட நிலையில் இதில் வருமான வரி விலக்கு அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், அதேபோல் 80சியில் கிடைக்கும் விலக்கு அதிகரிக்க ஆலோசிக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் மாத சம்பளம் வாங்குவோருக்கு நல்ல செய்தி நிச்சயம் உண்டு என்று எதிர்பார்க்கப்படுகிறது.