வணிகம்
பிஎஸ்என்எல் – எம்டிஎன்எல் இணைவுக்கு மத்திய அரசு ஒப்புதல்… அடுத்த அதிரடி திட்டம் என்ன?
நீண்ட காலமாக நட்டத்தில் இயங்கி வரும், பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் – எம்டிஎன்எல் இணைவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்களின் கூட்டத்திற்குப் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த, தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத், பிஎஸ்என்எல் – எம்டிஎன்எல் இணைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 29,957 கோடி ரூபாய் மூலதனம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அடுத்த 4 வருடத்தில் சவரன் தங்க பத்திரம் திட்டம் கீழாக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 15,000 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட உள்ளது.
விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவைக்கான அலைக்காற்றுகளை வழங்க உள்ளதாக, அண்மையில் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்திருந்தார்.
ஆனால், முக்கிய தனியார் டெலிகாம் நிறுவனங்கள் 4ஜி சேவையை நீண்ட காலமாகவே வழங்கி வரும் நிலையில், பிஎஸ்என்எல்-க்கு தாமதமாக அலைகாற்றுகளை வழங்குவது சரியல்ல. எனவே நேரடியாக 5ஜி சேவைக்கான அலைக்காற்றுகளை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அரசு வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
தனியார் டெலிகாம் நிறுவனங்கள் 40 ஆயிரம் கோடி, 50 ஆயிரம் கோடி கடனில் உள்ள நிலையில், அவர்களுக்கு மட்டும் வங்கிகள் கடன் அளிக்கின்றன. ஆனால் வெறும் 8 ஆயிரம் கோடி கடன் மட்டுமே உள்ள எங்களுக்கு ஏன் நிதி அமைச்சகம் மற்றும் வங்கிகள் தயங்குகின்றன.
மத்திய மற்றும் மாநில அரசு துறைகள், நிறுவனங்கள் தங்களுக்கு 4 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக நிலுவைத் தொகை வைத்துள்ளன. அவற்றைச் சரியாகச் செலுத்தினாலே தங்களுக்கு உள்ள பாதி பிரிச்னைகள் தீரும் என்று பிஎஸ்என்எல் முன்னாள் ஊழியர்கள் சங்கங்கள் கூறுகின்றன.
பிஎஸ்என்எல் – எம்டிஎன்எல் நிறுவனங்கள் இணைந்தாலும், எம்டிஎன்எல், பிஎஸ்என்எல்-ன் துணை நிறுவனமாகவே செயல்படும் என்றும் ரவி ஷங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
இரண்டு நிறுவனங்கள் இருக்கும் போது அவற்றுக்கான செலவுகள் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.