உலகம்
பிரிட்டன் வங்கிகளில் ரஷ்யர்கள் பணபரிவர்த்தனை செய்ய தடை: போரிஸ் ஜான்சன் உத்தரவு
பிரிட்டன் வங்கிகளில் 50 ஆயிரம் பவுண்டுகளுக்கு மேல் ரஷ்யர்கள் பணப்பரிவர்த்தனை செய்ய தடை என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் மீது நேட்டோ நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா போர் தொடுத்துள்ளது என்பதும் இந்தப் போருக்கு பிரிட்டன் பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. இது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என்றும் அருவருப்பான செயலை ரஷ்யா செய்து வருகிறது என்றும் இதற்கு ரஷ்யா பெரும் விலை தர வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் பிரிட்டன் வங்கிகளில் 50,000 பவுண்டுகளுக்கு மேல் ரஷ்யர்கள் பண பரிவர்த்தனை செய்ய தடை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் அவர் அறிவித்துள்ளார்.
ரஷ்ய விமான நிறுவனம் ஏரோபிளாட், தொழில் நிறுவனங்கள், ரஷ்ய வங்கிகள், தன்னல குழுக்கள் ஆகியவை மீது பிரதமர் போரிஸ் ஜான்சன் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளார்.
லண்டன் நிதி அமைப்பிலிருந்து ரஷ்யர்கள் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யாவுக்கான அனைத்து ஏற்றுமதிக்கும் தடை விதித்துள்ளார். ரஷ்யாவின் கைகளில் கறை படிந்துள்ளதாதாகவும், உக்ரைன் மீது படிந்த ரத்தக்கறையில் ஒரு போதும் ரஷ்யாவால் சுத்தப்படுத்த முடியாது என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.