இந்தியா

சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம்!

Published

on

மத்திய அரசு, சில மாதங்களுக்கு முன்னர் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்த சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்துதான் கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக பெருந்திரளான விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தனது உத்தரவில் நீதிமன்றம் மேலும் கூறுகையில், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வல்லுநர் குழு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு, இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டேவுக்கு கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘நாங்கள் இந்தச் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கிறோம். இது வாழ்வா சாவா என்கிற விஷயமாகும். எனவே இந்த சட்டம் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்காக நாங்கள் கவலையுறுகிறோம். எனவே, இந்தப் பிரச்சனையை எங்களுக்குத் தெரிந்த சிறந்த வழியின் மூலம் தீர்க்கப் பார்க்கிறோம். அதன்படி 3 வேளாண் சட்டங்களுக்கும் இடைக்காலத் தடை விதிக்கிறோம். இந்தப் பிரச்சனயை சரி செய்யும் நோக்கிலேயே நாங்கள் வல்லுநர் குழு அமைக்க உள்ளோம். அதற்கு உரிய வல்லுநர்களின் பெயர்களை எங்களிடம் சமர்ப்பியுங்கள். நாங்கள் அது குறித்து முடிவெடுப்போம்’ என்று கூறினார்.

குடியரசு தினமான வரும் ஜனவரி 26 ஆம் தேதி, டெல்லியில் போராடும் விவசாயிகள் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்த உள்ளதாக எச்சரித்திருந்தனர். இதை நிறுத்தக் கோரியும் விவசாய சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது நீதிமன்றம்.

இன்றைய வழக்கு விசாரணையின் போது மத்திய அரசுத் தரப்பு, ‘உரிய ஆலோசனை மற்றும் ஆய்வுகளுக்குப் பின்னர்தான் விவசாய சட்டங்கள் அமல் செய்யப்பட்டன’ என்று வாதாடியது. அந்த வாதத்தை ஏற்காமல் உச்ச நீதிமன்றம், சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது மத்திய அரசுக்கும் போராடும் விவசாயிகளுக்கும் இடையிலான பிரச்சனையை சுமூகமாக தீர்த்துக் கொள்ள மேலும் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை இரு தரப்புகளுக்கும் இடையில் நடந்த 8 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியையே தழுவியுள்ளன. அதைக் கணக்கில் கொண்டு உச்ச நீதிமன்றம், ‘இந்த விவகாரத்தில் மத்திய அரசு சரிவர செயல்படுவதாக நாங்கள் கருதவில்லை. எதாவது ரத்தக் களறி ஏற்படுகிறது என்றால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்?’ என்ற கறார் கேள்வியைக் கேட்டது.

தற்போதைக்கு வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு உள்ளதால், விவசாயிகள் தரப்பு நிம்மதி அடையலாம். அதே நேரத்தில், வல்லுநர் குழு, இந்த விவகாரத்தை எப்படி கையாளும் என்பதில் சந்தேகம் நிலவி வருகிறது. நீதிமன்றத்தால் அமைக்கப்படும் வல்லுநர் குழு, இரு தரப்பையும் ஒரே மாதிரி நடத்துமா என்கிற சந்தேகங்களும் இப்போதே எழுப்பப்பட்டு வருகின்றன.

 

Trending

Exit mobile version