தமிழ்நாடு
Breaking: உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதி!
ஐதராபாத்தில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்று வந்தார் ரஜினி. படப்பிடிப்பு குழுவில் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ரஜினிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்தது. இருப்பினும் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தகவல் உலவி வந்தது.
இந்நிலையில் அவர், ஐதராபாத்தில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மருத்துவமனைத் தரப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இன்று காலை எங்கள் மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களாக ஐதராபாத்தில் அவர் ஷூட்டிங்கில் ஈடுபட்டிருந்தார். படப்பிடிப்புத் தளத்தில் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்கும் கடந்த 22 ஆம் தேதி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரின் முடிவு நெகட்டிவ் என வந்தது. அப்போதிலிருந்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
கோவிட்-19 தொடர்பான எந்த அறிகுறிகளும் அவருக்கு இல்லை என்றாலும், அவரின் ரத்த அழுத்தத்தில் தொடர் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. அது தொடர்பாக சிகிச்சை எடுத்துக் கொள்ளவே மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் ரத்த அழுத்தம் சீராகும் வரை மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருப்பார். ரத்த அழுத்தப் பிரச்சனையைத் தவிர ரஜினி, நல்ல உடல்நலத்துடன்தான் உள்ளார்’ என்று கூறியுள்ளது.