இந்தியா
போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் போட்ட விபரீதம் – அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
மகாராஷ்டிர மாநிலத்தில், குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து போடுவதற்கு பதில் சானிடைசர் கொடுக்கப்பட்டு உள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் போட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. தற்போது குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்திய அளவில், 2021 ஆம் ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து போடும் முகாமை மத்திய மற்றும் மாநில அரசுகள் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி ஆரம்பித்தன. இந்தியாவில், 5 வயதுக்கும் குறைவாக நாட்டில் உள்ள அத்தனை குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து, இலவசமாக போடப்பட்டு வருகிறது.
போலியோ நோயைத் தடுக்கும் பொருட்டு இந்தத் திட்டத்தை இந்திய அரசு, கடந்த பல ஆண்டுகளாக செய்து வருகிறது. கடைசியாக இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு, ஜனவரி 13 ஆம் தேதி, ஒரு குழந்தைக்குப் போலியோ நோய் இருந்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து வேறு எங்கேயும் போலியோ நோய் பதிவு செய்யப்படவில்லை.
அதே நேரத்தில், நோய்த் தாக்குவதற்கு முன்னதாக முன்னெரச்சிக்கையாக இருக்க வேண்டும் என்னும் நோக்கில் தொடர்ந்து இலவச போலியோ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அப்படி ஜனவரி 31 ஆம் தேதி ஆரம்பித்த, இந்த ஆண்டுக்கான போலியோ முகாம், இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
இப்படியான சூழலில் தான், மகாராஷ்டிர மாநிலத்தில் 12 குழந்தைகளுக்கு போலியோ மருந்துக்கு பதில் சானிடைசர் கொடுக்கப்பட்டுள்ள அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட 12 குழந்தைகளும் நல்ல உடல்நிலையில் உள்ளதாகவும், இதற்கு காரணமான மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என்றும் மகாராஷ்டிர அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.