கிரிக்கெட்
ஐபிஎல் அணியை ஏலம் எடுக்கும் ரஜினி பட நடிகை?
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இரண்டு கூடுதலான அணிகளில் இடம் பெற இருக்கும் நிலையில் அதில் ஒரு அணியை ரஜினி படத்தில் நடித்த நடிகை ஒருவர் வாங்க திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐபிஎல் தொடரில் தற்போது 8 அணிகள் இடம் பெற்றிருக்கும் நிலையில் 2022 ஆம் ஆண்டு முதல் கூடுதலாக இரண்டு அணிகள் என மொத்தம் 10 அணிகள் இடம் பெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அணியின் ஏலம் அக்டோபர் 26 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் இந்த அணிகளை ஏலத்தில் எடுக்க பிரபல கால்பந்து நிறுவனமான மான்செஸ்டர் யுனைடெட் உள்பட பல நிறுவனங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே ஐபிஎல் அணி ஏலத்தில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஷாருக்கான் வைத்து உள்ளார் என்பதும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஷில்பா செட்டி வைத்துள்ளார் என்பதும் பஞ்சாப் அணியை ப்ரீத்டி ஜிந்தா ஆகியோர் வைத்துள்ளனர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் கூடுதலாக ஒரு ஐபிஎல் அணியை பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே ஏலம் எடுப்பார்களா? என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’கோச்சடையான்’ என்ற தமிழ் படத்திலும் ஏராளமான பாலிவுட் படத்திலும் தீபிகா படுகோனே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.