தமிழ்நாடு
விறகே இல்லாத ‘அடடே’ பஞ்சு பொங்கல்..!- பாஜக பரிதாபங்கள்
சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வித்தியாசமான முறையில் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதில் ஒரு படி மேலே போயிருக்கிறது பாஜக. அவர்களின் வித்தியாசமான பொங்கல் கொண்டாட்டம் இணைய வைரலாக மாறியுள்ளது.
பொதுவாக பொங்கல் சமயத்தில் கட்சிகள், தொண்டர்களுடன் இணைந்து கிராமங்களுக்குச் சென்று பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், ‘நம்ம ஊரு பொங்கல் விழா’ என்னும் பெயரில் பாஜக, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பொங்கல் விழா கொண்டாடுகிறது. இதற்கு மக்களின் ஆதரவு பெரிதாக இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும் ஊடகங்கள் வீடியோ எடுக்க இந்த நிகழ்ச்சிகளுக்கு சென்றால், அதற்கு அவர்கள் செய்யும் அல்லபறைகள் வைரல் ரகம்.
பாஜகவின் ‘பொங்கல் விழாக்களில்’ பெயருக்கு ஒரு பானையில் பொங்கல் வைத்துவிட்டு, மற்ற பானைகளில் பஞ்சை நுரை போல பொங்கவிட்டுள்ளனர். யாராவது வீடியோ எடுத்தால் அந்த பஞ்சு பொங்கல் பானையைக் கிண்டி, ‘படம்’ காட்டியுள்ளனர். இது குறித்தான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி, வைரலாகி வருகிறது.