தமிழ்நாடு
வேட்பாளர் பட்டியலுக்கு முன்பே வேட்பு மனுத் தாக்கல் செய்த பாஜக நிர்வாகி – சொல்லும் காரணம் வேற லெவல்!!!
![Nainar Nagendran - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/03/Nainar-Nagendran.jpg)
இன்னும் ஒரு சில வாரங்களில் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் களம் காண்கிறது. அதிமுக கூட்டணியில் இந்த முறை பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதன்படியே திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த தொகுதியில் பாஜக சார்பில், அக்கட்சியின் மாநில துணைத் தலைவர், நயினார் நாகேந்திரன் களமிறக்கப்படுவார் என்று ஆரம்பம் முதலே சொல்லப்பட்டு வந்தது. அதிமுகவில் இருந்த நாகேந்திரன், இதுவரை நெல்லை தொகுதியில் நான்கு முறை போட்டியிட்டு இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் தான் அவரையே பாஜக தரப்பு, வேட்பாளராக தேர்வு செய்யும் எனத் தகவல்கள் வந்தன.
இன்று மாலைக்குள் பாஜக சார்பில், அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில் வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்னரே, வேட்பு மனுத் தாக்கலை நயினார் நாகேந்திரன் செய்துவிட்டார்.
இதற்கு அவர், ‘இன்று நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் சரியாக இருப்பதனால், வேட்பு மனுவைத் தாக்கல் செய்து விட்டேன். என்னைத் தான் கட்சி, வேட்பாளராக அறிவிக்க உள்ளது. நல்ல நேரம் தவறிவிடக் கூடாது என்பதற்காக, இப்போதே வேட்பு மனுவைத் தாக்கல் செய்து விட்டேன்’ என்று கூறியுள்ளார்.