தமிழ்நாடு
பாஜக தமிழகத்தில் 30 இடங்களை கைப்பற்றுமாம்: பொன்னார் உறுதி!
பிரதமர் மோடி நேற்று மதுரையில் அமைய உள்ள எயிம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட தமிழகம் வந்தார். பிரதமர் மோடியின் தமிழக வருகை டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனது. மோடிக்கு ஆதரவாகவும், மோடிக்கு எதிராகவும் டுவிட்டரில் ஹேஷ்டேகுகளை உருவாக்கி நெட்டிசன்கள் கதறவிட்டனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரதமர் மோடியின் இந்த வருகைக்கு மத்தியில் அவருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டமும் நடைபெற்றது. இது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் வைகோ மீது பாஜக மகளிர் அணியினர் செருப்பு வீசிய சம்பவமும் நடந்து நேற்றைய தினத்தை பரபரப்பாகவே வைத்திருந்தது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அப்போது, தமிழக முன்னேற்றத்திற்கான எந்தத் திட்டத்தையும் ஆதரிக்காமல், போராட்டம் மட்டுமே செய்கிறது மதிமுக. மோடிக்கு எதிராக வைகோ கறுப்புக்கொடி காட்டியது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 19-ம் தேதி கன்னியாகுமரி வர வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன் பாஜக கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் குறைந்தபட்சம் 30 இடங்களைக் கைப்பற்றுவோம் என்றும் தெரிவித்தார்.