தமிழ்நாடு
என்ன செய்தீர்கள்?: மோடியிடம் கேள்வி கேட்ட பாஜக தொண்டரால் பரபரப்பு!
![Modi 2 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/12/Modi-2-1.jpg)
5 மாநில தேர்தல் தோல்வி பாஜகவை மிகவும் பாதித்துள்ளது. இதனையடுத்து வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற பாஜக தொண்டர்கள், நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசி வருக்கிறார். அதன்படி புதுச்சேரி பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார் பிரதமர் மோடி.
அப்போது பேசிய மோடி, பூத் அளவில் கட்சியை பலப்படுத்த வேண்டும். தொடர்ந்து மக்களை சந்தித்து கடந்த முறையை விட கூடுதல் இடங்களை பெற பாடுபடுங்கள். அரசின் திட்டங்களை மக்களிடம் சொல்லி வாக்கு எண்ணிக்கையை உயர்த்துங்கள். அனைவரும் நமோ ஆப் டவுன்லோட் செய்து 5 ரூபாய் நன்கொடை அளியுங்கள் என்றார்.
இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடியிடம் கட்சி நிர்வாகிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்தார். அப்போது நிர்மல் குமார் ஜெயின் என்பவர், நடுத்தர வர்க்க மக்களிடம் வரியை மட்டுமே வசூலிப்பதில் குறியாக உள்ளீர்கள். நடுத்தர வர்க்கத்தினருக்கு என்ன செய்தீர்கள்? அவர்கள் நிம்மதியாக இருக்க நடவடிக்கை எடுங்கள் என்றார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத பிரதமர் மோடியின் முகம் இறுகியது. பின்னர் நீங்கள் வியாபாரி, வர்த்தக ரீதியாக பேசுகிறீர்கள். நடுத்தர மக்களின் நலன் பாதுகாக்கப்படும் என்று கூறிவிட்டு வணக்கம் புதுச்சேரி என சொல்லி வீடியோ கான்பரன்ஸ் கலந்துரையாடலை முடித்துக் கொண்டார். பிரதமர் மோடியிடம் தொண்டர் ஒருவர் ஆட்சியை விமர்சனம் செய்து கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.