தமிழ்நாடு
ரூ.50 லட்சம் மோசடி புகார்: பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் கைது!
ரூபாய் 50 லட்சம் மோசடி செய்ததாக கார்த்திக் கோபிநாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக ஆதரவாளர் மற்றும் அரசியல் விமர்சகர் என்று யூடியுப் மூலம் பலர் அறியப் படுபவர் கார்த்திக் கோபிநாத். இவர் திமுக அரசுக்கு எதிராக பல ஆவேசமான கருத்துக்களை கடந்த சில மாதங்களாக தனது யூடியூப் சேனலில் தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் சிறுவாச்சூர் கோயிலை புனரமைப்பதில் ரூபாய் 50 லட்சம் வசூல் செய்து மோசடி செய்ததாக கார்த்தி கோபிநாத் மீது புகார் எழுந்த நிலையில் அந்தப் புகாரின் அடிப்படையில் தமிழக காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
சமீபத்தில் சிறுவாச்சூர் கோவிலில் சித்திரை திருவிழா நடந்த போது இந்து கோவிலின் சிலைகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. இந்த சிலைகளை ஆன்லைன் மூலம் நிதி வசூல் செய்து புனரமைக்க இருப்பதாக கூறிய கார்த்தி கோபிநாத் அவ்வாறு வசூலித்த பணத்தில் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து அண்ணாமலை தனது டுவிட்டரில், ‘தங்களுக்கு எதிரான குரல்களை ஒடுக்க திமுக அரசு முயற்சிக்கிறது. கார்த்திக் கோபிநாத்தின் தந்தையிடம் நான் பேசினேன். கார்த்திக் கோபிநாத்துக்கு ஆதரவாக நிற்போம். தமிழக பாஜகவின் சட்டக் குழுவினர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஆதரவாக இருப்பர் என்றார்.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில், கார்திக் கோபிநாத் கைது வன்மையாக கண்டிக்கத் தக்கது. இந்துக்களோ இந்து கோவில்களோ பாதிக்கப்பட்டால் அதற்கு உதவிட யாரும் முன்வரக்கூடாது என பயமுறுத்தும் இந்து விரோத அரசின் வன்மத்தின் வெளிப்பாடு என விமர்சித்துள்ளார்.