தமிழ்நாடு
முதல்வர் வேட்பாளரை பாஜக தலைவர்தான் சொல்லணும்: அதிமுக அமைச்சர் பாண்டியராஜன்
கூட்டணிக் கட்சிகளாக இருக்கும் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.
தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக, எதிர்வரும் 2021 ஆம் ஆண்டுக்கான தேர்தலில் தங்களின் முதல்வர் வேட்பாளர், எடப்பாடி பழனிசாமிதான் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. இதை பாஜகவின் மாநில நிர்வாகிகள் ஏற்காமல், தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகன், ‘தேசிய ஜனநயாகக் கூட்டணியின் ஒரு அங்கம்தான் அதிமுக. எனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜகவின் மத்திய தலைமைதான் அறிவிக்கும்’ என்றார். இதனால் கொதிப்படைந்த அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், ‘எங்களின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடியார்தான். ஏற்றுக் கொண்டால் கூட்டணியில் இருங்கள். இல்லையென்றால் வெளியேறுங்கள்’ என்று பதிலடி கொடுத்தது.
இப்படியான சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவின் அமைச்சரான மாஃபா பாண்டியராஜன், ‘முருகன் சொல்லியிருப்பது சரிதான். காரணம் அவர் பாஜகவின் மாநிலத் தலைவர்தான். முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் உரிமை அருக்குக் கிடையாது. இன்னும் ஓரிரு நாட்களில் பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தமிழகத்திற்கு வந்து இது குறித்தான அறிவிப்பை வெளியிடுவார்’ என்று பாஜகவுக்கு ஆதரவான கருத்தைக் கூறியுள்ளார். இதனால் அதிமுக முகாமில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.