இந்தியா
பாஜக தலைவர்களின் தொடர் மரணம்: பிரக்யா சிங் தாகூர் கூறும் காரணம்!
முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அருண் ஜெட்லி நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்த வந்த பாஜக எம்பி பிரக்யா சிங் தாகூர் எதிர் கட்சிகள் மீது குற்றச்சாட்டு ஒன்றை வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பாஜகவில் தொடர்ந்து முக்கிய தலைவர்கள் மரணமடைந்து வருகிறார்கள். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம். தொடர்ந்து மனோகர் பாரிக்கர், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி என பாஜக முக்கிய தலைவர்கள் மரணமடைந்துள்ளார்கள். இது பாஜகவினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாஜக தலைவர்களின் இந்த தொடர் மரணத்துக்கு எம்பி பிரக்யா சிங் தாகூர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக எம்பி பிரக்யா சிங் தாகூர், தேர்தல் சமயத்தில் மகாராஜ் ஜி என்னிடம், இது மிகவும் மோசமான நேரம். பாஜகவுக்கு எதிராகவும், உங்கள் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் தீய சக்திகளை பயன்படுத்துகின்றன. நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்தார். நான் அதன் பிறகு அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இப்போது நடப்பதை எல்லாம் பார்க்கும் போது அவர் கூறி உண்மை என்றே தோன்றுகிறது. பாஜக மூத்த தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மரணமடைந்து வருகின்றனர் என்றார். பாஜக தலைவர்களின் மரணத்துக்கு எதிர் கட்சியினர் தான் காரணம் என பிரக்யா சிங் எம்பி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.