தமிழ்நாடு
பாகிஸ்தான் கொடிக்கு பதிலாக முஸ்லீம் லீக் கொடியை எரித்த பாஜக வழக்கறிஞர்கள்!
கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 இந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். இதற்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் பொறுப்பேற்றாலும், அந்த அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்படுவதால் அந்த நாட்டுக்கு எதிராக இந்தியா கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறது.
அதே நேரத்தில் இந்தியாவில் பாகிஸ்தானுக்கு எதிரான கோஷங்கள் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு காங்கிரஸ் மற்றும் பாஜக வழக்கறிஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே, காஷ்மீரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பாக மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பதர்சயீத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து பாஜக பிரிவு வழக்கறிஞர்கள், பாகிஸ்தான் தேசியக் கொடியை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தான் கொடியை எரிப்பதாக நினைத்துக் கொண்டு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கொடியை எரித்தனர். பாகிஸ்தான் கொடியின் அளவு மற்றும் அதில் இடம்பெற்ற பிறை, நட்சத்திரங்களின் வடிவத்திலுள்ள வேறுபாட்டின் மூலமாக இது தெரிய வந்துள்ளது.