தமிழ்நாடு
நம்புங்க… தமிழகத்தில் பாஜக வளர்ந்திடுச்சுங்க…- சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி!
![Rajendra Balaji - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/08/Rajendra-Balaji-2.jpg)
தமிழகத்தில் பாஜக நன்கு வளர்ந்து விட்டதாக அதிமுகவின் முக்கிய நிர்வாகியும், தமிழக பால் வளத் துறை அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை பாஜக, அதிமுகவோடு கூட்டணி வைத்து சந்திக்கிறது. கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதாவுக்கு, அதிமுக தரப்பில் 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதன்படி வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜக, திருவண்ணாமலை, நாகர்கோயில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம்விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி, கோயம்புத்தூர் தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம், மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது.
பல்வேறு தொகுதிகளில் அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள், வேட்பு மனுவைத் தாக்கல் செய்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘பாஜக இன்று நன்கு வளர்ந்துவிட்ட கட்சியாக இருக்கிறது. டெல்லியில் ஆட்சி செய்து வரும் மோடியைப் பார்த்து, உலக வல்லரசு நாடுகளே அச்சப்படுகின்றன.
மோடியின் ஆட்சியால், உலகெங்கிலும் வாழும் இந்திய மக்கள் பெருமை கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட ஒரு நல்லாட்சியையும், வலிமையான தலைமையையும் பாஜக இன்று கொண்டுள்ளது’ என்றார்.
இன்னொருப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘நமக்கும் பாஜகவுக்கு என்ன ஒற்றுமை என்று கேட்கிறார்கள். நாமும் ஆன்மிகவாதிகள். அவர்களும் ஆன்மிகவாதிகள். அது தான் இருவருக்கும் இடையிலான ஒற்றுமையாகும்’ என்று கூறினார்.