வணிகம்
பறவை காய்ச்சல் தீவிரம் இல்லை ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: மத்திய அரசு
கேரளா, இமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும் பாதிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் ஆங்கில இதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ள கால்நடை பராமரிப்பு செயலாளர் அதுல் சதுர்வேதி, “பறவை காய்ச்சல் தீவிரமாக இல்லை, எனவே அச்சமடையத் தேவையில்லை. அதே நேரம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எனவே பறவை காய்ச்சல் குறித்து கண்காணிக்கக் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். கோழி கறி மற்றும் முட்டை சாப்பிடுவதால் பறவை காய்ச்சல் பரவும் என்ற வதந்திகளை நம்பவேண்டாம்.
கடந்த 10 ஆண்டுகளில், ஒரு மனிதருக்குக் கூட பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்படவில்லை. கோழி கறி மற்றும் முட்டை சாப்பிடுவதால் வைரஸ் பரவும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.