ஆரோக்கியம்
பறவைக் காய்ச்சல்: மனிதர்களுக்கு எப்படி பரவும், சிக்கன் & முட்டை சாப்பிடலாமா?
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக் காய்ச்சல் நோய் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கிருந்து வரும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. மேலும் கேரளாவிலிருந்து தமிழகத்துக்கு இறைச்சிக்கான பறவை ஏற்றுமதியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கேரளாவைத் தவிர ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பறவைக் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இன்னும் தமிழகத்தில் அதன் பாதிப்பு அதிகமாக இல்லை என்றாலும், சில வழிகாட்டு அறிவுரைகளை வழங்கியுள்ளது உலக சுகாதார அமைப்பு.
‘சிக்கன் அல்லது முட்டையை சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை. அதே நேரத்தில் கோழி இறைச்சி அல்லது முட்டை நன்றாக சமைக்கப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 70 டிகிரி வெப்ப நிலையில் சமைக்கப்படும் உணவானது, அனைத்துவித வைரஸ்களையும் அழித்துவிடும். எனவே நல்ல வெப்பத்தில் சிக்கன் மற்றும் முட்டையை சமைத்துச் சாப்பிடலாம்’ என்று கூறியுள்ளது உலக சுகாதார அமைப்பு.
மேலும், ‘பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவக் கூடிய நோய்தான். வீட்டில் பாதிக்கப்பட்ட பறவையைக் கொன்று, அது சம்பந்தமான பணிகளை செய்யும் போது மனிதர்களுக்குப் பறவைக் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. அதைத் தவிர்ப்பது நல்லது’ என்று தெரிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு.