விமர்சனம்
சர்கார்-க்கு போட்டி.. அஜித் ரசிகர்.. ‘பில்லா பாண்டி’ – விமர்சனம்
தயாரிப்பாளர், நடிகருமான ஆர் கே சுரேஷ் முதன் முறையாக நாயகனாக நடித்துள்ள திரைப்படம் பில்லா பாண்டி. சர்காருக்கு போட்டி என்பதாலோ என்னவோ தீவிர அஜித் ரசிகராகவும் நடித்துள்ளார்.
கட்டிட வேலை செய்யும் ஆர் கே சுரேஷ் (பாண்டி) அஜித்தின் பில்லா படத்தினால் கவரப்பட்டுத் தனது பெயரை பில்லா பாண்டி என்று மாற்றிக்கொள்கிறார். மேலும் கட்டிட வேலையில் சம்பாதிக்கும் பணத்தினை ரசிகர் மன்றத்தின் நற்பணிகளுக்காகச் செலவு செய்கிறார்.
ஏம்ப்பா.. அஜித் ரசிகர் மன்றங்களைக் களைத்துவிட்டாரா? இல்லையா?
சரி, அதை விடுவோம் காதல் இல்லாமல் தமிழ் திரைப்படமா? ஆர் கே சுரேஷ்க்கு தனது முறை பெண் சாந்தினியுடன் காதல். ஆனால் சம்பாதிக்கும் பணத்தினை ரசிகர் மன்றத்திற்குச் செலவு செய்வது பிடிக்காமல் ஆர் கே சுரேஷ்க்கு சாந்தினியை திருமணம் செய்து வைக்க மறுக்கிறார் மாரிமுத்து.
மறுபக்கம் ஆர் கே சுரேஷ் காண்ட்ராக்ட் எடுத்து கட்டும் வீட்டின் உரிமையாளர் இந்துஜா. இந்துஜாவுக்கும் ஆர் கே சுரேஷ் மீது காதல் ஏற்பட அவரைக் கண்டுகொள்ளாமல் சாந்தினியை மட்டும் காதலிக்கும் நல்லவர். வில்லன் நடிகரை நல்லவராக ஏற்க கூடிய அளவிலான கதையினை ஏற்றுத் தனது கதாபாத்திரத்தினைச் சிறப்பாகச் செய்துள்ளார்.
இருவரும் ஆர் கே சுரேஷை காதலிக்க இந்துஜாவின் பெற்றோர்கள் விபத்தில் இறக்கின்றனர். அதில் இந்துஜா மனநிலை பாதிக்கப்பட அவரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பினை ஏற்கிறார் ஆர் கே சுரேஷ். இதனால் சாந்தினியுடனான காதலில் விரிசல் ஏற்படுகிறது.
கடைசியில் இருவரும் இணைந்தார்களா? இந்துஜாவின் அந்த நிலைக்கு என்ன காரணம் என்பது எல்லாம் மீத கதை. முதல் பாதியில் கலகலப்பாகவும், இரண்டாம் பாதியில் கண் கலங்கவும் வைக்கிறார் ஆர் கே சுரேஷ்.
வழக்கமான கதாநாயகியாக அறிமுகம் ஆகும் இந்துஜா விபத்துக்குப் பின் குழந்தையாகவே மாறி உருக வைக்கிறார். சாந்தினி தனக்குக் கொடுத்த கதாபத்திரனை நிறைவு செய்துள்ளார். தம்பி ராமையா, அமுதவாணன் இருவரும் சிரிக்க வைக்கிறார்கள்.
மதுரை பின்புலம், நகைச்சுவை, காதல், குடும்பச் செண்டிமெண்ட், ஆக்ஷன் என எல்லாம் கலந்து ஒரு திரைப்படமாக ராஜ்சேதுபதி இந்தப் படத்தினை இயக்கியுள்ளார்.
ஆக மொத்தம் பில்லா பாண்டியை ஒரு முறை பார்க்கலாம்.