உலகம்
அடுத்த 6 மாசம் கொரோனா ரொம்ப மோசமா பரவும்: சொல்கிறார் பில் கேட்ஸ்- காரணம் என்ன?
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ், ‘கொரோனா வைரஸின் மிக மோசமான காலமாக அடுத்த ஆறு மாதங்கள் இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார். பில் கேட்ஸின் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது அறக்கட்டளை சார்பில் கொண்டு வரப்படும் தடுப்பூசியானது விலை குறைவான ரீதியில் மக்களுக்குக் கிடைக்கும் என்று தகவல்.
பில் கேட்ஸ், கடந்த 2015 ஆம் ஆண்டே, எதிர்காலத்தில் இப்படியொரு பெருந்தொற்று வரும் என்பதை கணித்திருந்தார். அவர் வரப்போகும் வைரஸ் பெருந்தொற்று மூலம் அதிகப்படியான உயிரிழப்பு இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் கணித்த அளவுக்கு உயிரிழிப்பு ஏற்படவில்லை. ஆனால் அவர் தெரிவித்ததைவிட பொருளாதார நெருக்கடி அதிகமாகவே உருவாகியுள்ளது.
கொரோனா தொற்றின் தற்போது நிலை மற்றும் இனி அது எப்படி உருமாறக் கூடும் என்பது குறித்து கேட்ஸ், ‘வருந்தத்தக்க வகையில் அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்கள் இந்த பெருந்தொற்றின் மிக மோசமான காலமாக இருக்கும் என்று கருதுகிறேன். இந்த காலக்கட்டத்தில் கூடுதலாக இரண்டு லட்சம் பேர் உயிரிழக்கக்கூடும் என்று நாங்கள் செய்து வரும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால், இந்த இறப்பு விகிதம் பெருமளவு குறையும் என்றும் தெரிகிறது’ என்று கூறியுள்ளார்.