இந்தியா
ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்.. உலகிலேயே விலை உயர்ந்த பயிர் இந்தியாவில் சாகுபடி.. அதன் நன்மைகள் என்ன தெரியுமா ?
பாட்னா: உலகின் மிக விலை உயர்ந்த அறிய வகை தாவரத்தை இப்போது இந்தியாவிலும்சோதனை முறையில் சாகுபடி செய்ய தொடங்கியுள்ளார் பீகாரை சேர்ந்த ஒரு விவசாயி.
ஒரு கிலோ காய்கறி ஒரு லட்சம் ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா? இப்போது இருக்கும் விலைவாசியில் எதுவும் சாத்தியம் தான் என்றாலும் இங்கு ஒரு தாவரம் நீண்ட காலமாகவே உலகின் மிக விலை உயர்ந்த தாவரமாக கருதப்படுகிறது. அதை தான் இப்போது இந்தியாவிலும் சாகுபடி செய்ய தொடங்கிவிட்டனர். பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தின் நவிநகர் தொகுதியின் கீழ் உள்ள கரம்தி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி 38 வயதாகும் அம்ரேஷ் சிங். இவர் தன்னுடைய நிலத்தில் இந்த பயிரை , சோதனை முறையில் சாகுபடி செய்ய தொடங்கியுள்ளார்.
hop-shoots என அழைக்கப்படும் இந்த பயிர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச சந்தைகளில் ஒரு கிலோ 1000 பவுண்டுகளுக்கு விற்கப்பட்டது. இந்திய மதிப்பில் 1 லட்சம் ரூபாய் வரை விற்பனையானது. இந்த பயிர் இந்திய சந்தையில் அரிதாகவே காணப்படுகிறது. ஏதேனும் சிறப்பு ஆர்டர் மூலம் வர வைத்து மட்டுமே வாங்கப்படுகிறது. இப்போது பீகாரில் செய்யப்பட்ட சாகுபடியில் 60 சதவிகிதம் வெற்றியடைந்துள்ளதாக அம்ரேஷ் சிங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். hop-shoots சாகுபடியை மேம்படுத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு ஏற்பாடுகளை செய்தால், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் விவசாயிகளால் மற்ற விவசாய முறைகளில் செய்யக்கூடியதை விட 10 மடங்கு அதிகமாக சம்பாதிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
வாரணாசியில் உள்ள இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனத்தின் வேளாண் விஞ்ஞானி டாக்டர் லால் மேற்பார்வையில் இதன் சாகுபடி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த காய்கறியின் மரக்கன்றுகளை வாரணாசியில் உள்ள இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டு பயிரிட்டதாக சிங் கூறியுள்ளார். இது பீகாரில் ஒரு பெரிய வெற்றியாகவும், விவசாயமாகவும் இருக்கும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் சிறப்பு என்ன?
அதன் பயன்பாடு குறித்து பேசியவர், hop-shoots-ன் பழம், மலர் மற்றும் தண்டு என அனைத்தும் பானம் தயாரித்தல், பீர் தயாரித்தல் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை தயாரிப்பது போன்ற மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இந்த காய்கறியின் தண்டுடன் தயாரிக்கப்படும் மருந்து, காசநோய் சிகிச்சையில் அதிக நோய் தீர்க்கும் விளைவைக் கொண்டிருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது என்றார். அதன் பூ hop-cones அல்லது strobile என்று அழைக்கப்படுகிறது, இது பீர் தயாரிப்பதில் நிலைத்தன்மை முகவராகப் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள கிளைகள் உணவு மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன என்று அவர் கூறினார்.
இதை ஒரு மூலிகையாகப் பயன்படுத்துவது ஐரோப்பிய நாடுகளிலும் பிரபலமாக உள்ளது, அங்கு காய்கறியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுவதால் சருமத்தை பளபளப்பாகவும் இளமையாகவும் வைத்திருக்க இது பயன்படுத்தப்படுகிறது. hop-shoots முதன் முதலில் 11-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இவை மனித உடலில் புற்றுநோய் செல்களைக் கொல்ல பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படும் ஹுமுலோன்கள் மற்றும் லுபுலோன்கள் என்ற அமிலத்தைக் கொண்டுள்ளன. மனச்சோர்வு, பதட்டம் உள்ளவர்களுக்கு தளர்வு அளிக்கிறது, வலி நிவாரணி மற்றும் தூக்கமின்மையையும் குணப்படுத்துகிறது.
ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிற நாடுகளில் hop-shoots சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது. இந்தியாவில், இது முன்னதாக இமாச்சல பிரதேசத்தில் செய்யப்பட்டது, ஆனால் அதிக விலை காரணமாக அதன் சந்தைப்படுத்தல் பெரியளவில் நடைபெறாததால் நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் பீகாரில் பயிரிடப்பட்டுள்ளது. இம்முறை இது எந்த அளவிற்கு பலன் கொடுக்க போகிறது என்பது வரும் காலங்களில் தெரிய வரும்.