சினிமா
பிக் பாஸ் வீட்டில் உள்ள வனிதாவை கைது செய்ய விரைந்த போலீசார்!
பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் போஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நடிகையும் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளுமான வனிதா கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக அவரை கைது செய்ய போலீசார் விரைந்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை வனிதா கடந்த 2000-ஆம் ஆண்டில் ஆகாஷ் என்ற டிவி நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு விஜய் ஸ்ரீகரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் உள்ளார்கள். பின்னர் ஆகாஷை விவாகரத்து செய்த வனிதா, 2007-ஆம் ஆண்டு ஆனந்தராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜெயந்திகா என்ற மகள் உள்ளார். இதனையடுத்து வனிதா 2010-ஆம் ஆண்டு ஆனந்தராஜையும் விவாகரத்து செய்தார். இதனையடுத்து ஜெயந்திகா தனது தந்தையுடன் தெலுங்கானாவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் அறிமுக நிகழ்ச்சிக்கு வனிதா தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் வந்திருந்தார். இந்த சூழ்நிலையில் தெலுங்கானாவில் வசித்து வந்த ஜெயந்திகாவை வனிதா கடத்திச் சென்றுவிட்டதாக தெலுங்கானா போலீசில் ஆனந்தராஜ் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் வனிதா மீது ஆள்கடத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் வனிதாவை கைது செய்ய தெலுங்கான போலீசார் தமிழக போலீசாரின் உதவியை நாடியுள்ளனர். இதனையடுத்து வனிதாவை சந்திக்க பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர் தமிழக போலீசார். ஆனால் பிக்பாஸ் விதிமுறைகளின்படி தற்போது வனிதா வெளியே வரமுடியாது என்பதால் தமிழக போலிசாரும், தெலுங்கானா போலீசாரும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.