டிவி
‘பிக் பாஸ்’ வீட்டில் சித்ரா மரணம் குறித்து தெரிவிக்கப்படுமா?
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்திற்கு ‘பிக் பாஸ்’ வீட்டில் அஞ்சலி செலுத்தப்பட உள்ளதாக என்று கூறப்படுகிறது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் ‘முல்லை’ கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு ஹேமநாத் என்பவருடன் பதிவு திருமணம் நடைபெற்றது. சித்ராவின் மரணம் தற்கொலை தான் என்று போலீஸ் தரப்பில் கூறி வந்தாலும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நெருங்கிய நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று (டிச.10) சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது உறவினர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், கோட்டூர்புரத்தில் உள்ள சித்ராவின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நேற்று மாலை சுமார் 5.30 அளவில் வேளச்சேரி மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
இதனிடையே சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் குறித்து பிக் பாஸ் வீட்டில் அறிவிக்கப்படுமா, சித்ராவுக்கு பிக் பாஸ் வீட்டில் அஞ்சலி செலுத்தப்படுமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரும் சித்ராவின் நெருங்கிய நண்பர்களாவர்கள். எனவே, அவரது இறப்பு செய்தியைக் கேட்டால் கண்டிப்பாக அனைவரும் கண்ணீர் விட்டு கதறி அழுது விடுவார்கள்.