தமிழ்நாடு
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: கருப்பு பெட்டி கிடைத்ததா?
![coonur hlicopter accident 4 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/coonur-hlicopter-accident-4.jpg)
இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் பலியான ஹெலிகாப்டர் விபத்து குறித்த விசாரணை ஒருபக்கம் நடந்து வரும் நிலையில் இந்த ஹெலிகாப்டரில் உள்ள கருப்பு பெட்டியை தேடும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று மதியம் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்றில் இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்பட 14 பேர் சென்று கொண்டிருந்தனர்.
அந்த ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்பட 13 பேர் பலியாகி உள்ளனர் என்பதும் ஒருவர் மட்டும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஹெலிகாப்டரில் உள்ள கருப்பு பெட்டியை மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்களும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டால் தான் விபத்துக்கான காரணம் தெரியவரும் என்பதால் இராணுவ குழுவினர் மற்றும் மீட்பு படையினர் கருப்பு பெட்டியை கண்டுபிடிப்பதில் தீவிரமாக இறங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெலிகாப்டர் தரையிறங்க சில நிமிடங்களே இருந்த நிலையில் விழுந்து நொறுங்கி உள்ளதால் ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்றும் அதற்கு கருப்புப்பெட்டி முக்கிய என்றும், கருப்பு பெட்டியை கண்டுபிடித்த பின்னர்தான் இந்த விபத்து குறித்த விசாரணை தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.