தமிழ்நாடு
‘வீரத்தமிழச்சியை சந்திக்க வந்தேன்’: சசிகலாவை சந்தித்தப் பின் இயக்குநர் பாரதிராஜா பன்ச்
சசிகலாவை இன்று நேரில் சென்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், சசிகலாவின் நெருங்கிய தோழியுமான ஜெயலலிதாவின் பிறந்த நாள். இந்த நாளில் பாரதிராஜா, சசிகலாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது தமிழக அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலாவின் சந்திப்புக்குப் பின்னர் பாரதிராஜா பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-
நான் அரசியல்வாதி கிடையாது. ஒரு சாதனைத் தமிழச்சியைப் பார்க்க வந்தேன். ஒரு சாதனைப் பெண் சசிகலா. அவர் ஒரு வீரத் தமிழச்சி.
இப்ப தான சசிகலா வந்திருக்காங்க. பொறுத்திருந்து அவரது நடவடிக்கையைப் பாருங்கள். தமிழக அரசியல் வெற்றிடத்தை சசிகலா நிரப்புவார். இவ்வாறு அதிரடியாக பேசியுள்ளார்.
பாரதிராஜாவைப் போன்றே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இன்று சசிகலாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், சசிகலாவின் அரசியல் நடவடிக்கைகள் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றது.
ஒரு சில நாட்களுக்கு முன்னர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ‘பன்னீர்செல்வம் தற்போது வருத்தத்தில் இருக்கிறார். தவறான அரசியல் முடிவை எடுத்து அவர் வேதனையில் இருக்கிறார். அவர் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால் ஆதரவு கொடுப்போம்’ என்று ஓபிஎஸ்-ஸுக்கும் தூது விட்டுள்ளார்.