இந்தியா
திருமணத்துக்கு முன்னர் விருப்பத்துடன் உடலுறவு கொண்டால் அது பலாத்காரம் ஆகாது: உச்ச நீதிமன்றம் அதிரடி!
திருமணம் ஆகாத நிலையில் ஒரு ஆணும், பெண்ணும் தங்கள் விருப்பத்துடன் உடலுறவு கொண்டால் அது பலாத்காரமாக எடுத்துக்கொள்ளப்படாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
விற்பனை வரித்துறையின் பெண் உதவி ஆணையர் ஒருவரும், சிஆர்பிஎஃப் அதிகாரி ஒருவரும் 6 ஆண்டுகளாக நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். இருவரும் அவர்களது வீட்டில் சேர்ந்து பல நேரங்களில் இருந்துள்ளனர். இந்நிலையில் அந்த சிஆர்பிஎஃப் அதிகாரிக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு தொடர்ந்தார் அந்த பெண் உதவி ஆணையர்.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.ஒய். சந்திராசூட், இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிஆர்பிஎஃப் அதிகாரி மீது பாலியல் பலாத்கார புகாரின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதாடப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள், திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு அதனை மீறுவதை தவறான வாக்குறுதியளித்து விட்டு ஏமாற்றியதாக எடுத்துக் கொள்ள முடியாது என்றனர். மேலும், திருமணத்துக்கு முன்னர் விருப்பப்பட்டு உறவு கொள்வதை பாலியல் பலாத்கார குற்றச்சாட்டாக கருத முடியாது என தீர்ப்பளித்தனர்.