தமிழ்நாடு
வாக்கு எண்ணும் முன்னரே வெற்றி பெற்றதாக போஸ்டர் ஒட்டிய அதிமுக வேட்பாளர்!
வாக்கு எண்ணுவதற்கு முன்னரே வெற்றி பெற்றதாக அதிமுக வேட்பாளர் ஒருவரின் பேனர் வைக்கப்பட்ட நிலையில் அந்த பேனர் சற்றுமுன் அகற்றப்பட்டது
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது என்பதும் 234 தொகுதிகளிலும் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 2ம் தேதி எண்ணப்பட உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. வாக்கு எண்ணிக்கைக்கான பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் எந்த வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அவரது வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தடை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் என்ற தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வாக்கு எண்ணும் முன்பே தான் வெற்றி பெற்றதாக பேனர் வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து அந்த பேனர் உடனடியாக தேர்தல் அதிகாரிகளால் அகற்றப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் ராமலிங்கம் என்பவரும், திமுக சார்பில் வெள்ளக்கோவில் சாமிநாதன் என்பவரும் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் திமுக வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதிமுக வேட்பாளர் ராமலிங்கம் சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ஒரு சில பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இதுகுறித்து திமுக கொடுத்த புகாரின் அடிப்படையில் தேர்தல் அதிகாரிகள் உடனடியாக அந்த பேனரை அகற்றினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.